பிரிவுகள்
பொது

உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் தமிழ்நாட்டுக்காரர், தமிழர். வழக்கம் போலவே அரசியல் தான் முக்கிய அம்சம். அதைத் தாண்டி கதைப்பதும் குறைவுதான். அது இந்தியாவிலும் தேர்தல் காலம், இலங்கையிலும் தேர்தல் காலம், நான் அப்போது இருந்த குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் தேர்தல் காலம். அரசியல் இயந்திரங்களின் மீதான எமது ஒருமித்த அவநம்பிக்கைகளை தவிர்துப் பார்த்த‍தில் அன்றைய கலந்துரையாடலில் நாம் வந்தடைந்த முடிவு தான் ‘உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது’.

ஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்குத் தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயல‍லிதா, காங்கிரஸ், நேரு குடும்ப‍ம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும். இவ்வளவும் தெரிந்த‍தற்கே முக்கிய காரணம் இந்தியத் தொலைக்காட்சிளும் செய்தி ஊடகங்களும் தான். அந்த வகையில் எனது புரிதல்களும் இந்த தொலைக்காட்சிகள் தேர்ந்தெடுக்கும் பார்வையிலேயே தங்கியிருக்கிறது. அதைத்தாண்டி பொதுவான ஒரு இந்தியனின் பார்வையில் இந்திய அரசியலை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை.

இதுவே இலங்கை அரசியலைப்பற்றிய ஒரு சராசரி இந்தியத்தமிழனுக்குத் தெரிந்திருப்பது இன்னமுமே மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பார்க்க இலங்கைத் தொலைக்காட்சிகளோ இதர பொது ஊடகங்களோ இல்லை. அவர்களுக்கான மூல ஆதாரங்களாக இருப்பது இலங்கைச் செய்திகளை, அரசியலை இந்தியத் தொலைக்காட்சிகளிலும் இதர செய்தி ஊடகங்களிலும் கதைக்கும் இந்தியர்கள், இந்திய அரசியல்வாதிகள். ஆக, பொதுவான ஒரு இலங்கைத் தமிழனின் பார்வையில் இலங்கை அரசியலை பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

இந்த சூழலில், தமக்கான தனி நிகழ்ச்சி நிரலில் இயங்கும் ஊடகங்களூடாகவும் அரசியல்வாதிகள் ஊடாகவும் நாம் பெறக்கூடிய தகவல்கள் ஒருபோதும் பூரணமானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒரு சராசரி குடிமகனுக்கு இருக்க‍க்கூடிய பிரச்சினைகளையும் அவர்கள் எடுக்கும் அரசியல் தெரிவுகளையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் ஒரு இந்தியத்தமிழனின் தெரிவும், சிரிசேனவுக்கு வாக்களிக்கும் ஒரு இலங்கைத்தமிழனின் தெரிவும் மற்ற பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவும் வாய்ப‍்பில்லை.

புரிதலும் தெளிவும் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சூழலில் என்னால் செய்ய முடிந்த‍து மற்றவரின் அரசியலை புரிந்து கொள்ள முயல்வது, இல்லாவிட்டலா அவர்களின் அரசியல் தெரிவில் எனக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிவது. ஆக, அந்த கலந்துரையாடலின் முடிவில் நம் இருவருக்கும் பொதுவான புள்ளியாக இருந்தது குவின்ஸ்லாந்து அரசியல் மீதான எமது புரிதல் மட்டும் தான். கடைசியில் குவின்ஸ்லாந்து தேர்த‍லில் வந்த அரசியல் மாற்றமும் நாம் எதிர்பார்த‍து தான். காரணம் அது நம் இருவருக்கும் புரிந்த அரசியல். அதை தாண்டி – உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது.

பிரிவுகள்
பொது Oliyoodai Tamil Podcast

தமிழ் நாட்டு ஈழ அரசியல் – Tamil Rant

இப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா?

Download

பிரிவுகள்
பொது Oliyoodai Tamil Podcast

திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்

நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(???!). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.

நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.

இந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.

முடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…

புதுவருட வாழ்த்துகள்…!

Download

பிரிவுகள்
பொது

புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்துகள்

வருசப் பிறப்பாம், தமிழ்ப் புத்தாண்டாம், தமிழ்-சிங்கள புத்தாண்டாம். எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். ஆனாலும் எனக்கு ஜனவரி 1 தான் புது வருசப்பிறப்பு. ஏனெண்டா நான் பின்பற்றுற கலண்டரில முதல் மாசம் ஜனவரி எண்டு இருக்கிறதால, அந்த மாசத்தின்ட முதல் நாள் 1ம் திகதி எண்டு இருக்கிறதால, ஜனவரி 1 வருசப்பிறப்பு என்றது தான் எனக்கு பொருத்தமானது எண்டு நினைக்கிறன். மற்றப்படி மற்றாக்களுக்கு எப்ப வருசப்பிறப்பு என்றது எனக்கு பிரச்சினை இல்லை.

எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், (நீங்க எப்ப கொண்டாடுறீங்களோ அப்ப)

பிரிவுகள்
பொது

சீதனம்: ஏன் தவறு இல்லை

நேற்று நண்பர்கள் சிலர் Facebookல் பகிர்ந்திருந்த ஒரு பதிவு “யாழ்ப்பாண மாப்பிளைகளின் தற்போதய சீதன பெறுமதி நிலவரங்கள்“. இதற்கு வந்திருந்த பெரும்பாலான பதில்கள் சீதனம் வாங்குவது தவறு/பிழை/கேவலம்/அவமானம் என்ற தொனியிலேயே அமைந்திருந்தன. இதில் சில கருத்துக்கள் ‘லம்பாக சீதனம் வாங்குறதுக்காகவே நாங்க லவ் பண்ணுறதில்ல’ போன்ற உயரிய நோக்கங்களோடு வாழ்ந்து வரும் சில நண்பர்களிடம் இருந்தும் வந்திருந்தன.

சீதனம்: ஏன் தவறு இல்லை

நானும் பல சந்தர்ப்பங்களில் பொதுப்புத்தியில் கதைக்கும் போது சீதனம் தவறு என்ற கண்ணோட்டத்துடனேயே கதைத்திருக்கிறேன். ஆனாலும் சற்று நிதானமாக யோசித்தால் அது ஏன் தவறு இல்லை என்று தோன்றுகிறது.

எமது சமூகத்தில் திருமணம் என்பது குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்க மட்டுமே (Not for life, but just to create a family). இங்கு திருமணங்கள் ஒரு சமூக அங்கீகாரத்துக்காக, சமூகத்தில் மதிக்கப்படுதல் என்ற தேவைக்காகவே மட்டுமே பெரும்பாலும் செய்யப்படுகிறது. இதில் காதல், கத்தரிக்காய், அவரக்காய் எல்லாம் திருமணத்தின் பின் தானாக வந்து ஒட்டிக்கொள்ளும் என்பது எமது காலமான நம்பிக்கை.

திருமணங்களைச் சுற்றியிருக்கும் நம்பிக்கைளும் சமூக அங்கீகாரத்துக்காகவே. எட்டோ பத்தோ பொருத்தங்கள் இருத்தால் மட்டுமே திருமணம் என்ற கொள்கைகள் கூட, டொக்டர் மாப்பிள்ளைக்காக ஒன்றிரண்டு பொருத்தங்கள் குறையலாம் என்ற உப கொள்கை மூலம் சமன் செய்யப்படும். இங்கு டொக்டர் மாப்பிள்ளைக்கு இருக்கும் சமூக அங்கீகாரம் (மூட) நம்பிக்கைகளையும் முட்டாள் நம்பிக்கைகள் ஆக்கி விடுகின்றன.

இங்கு சீதனமும் ஒரு சமூக அங்கீகாரம் தான். ஊருக்குள்ளே யார் அதிகம் கொடுத்தது, யார் அதிகம் வாங்கியது என்ற போட்டிகளும், 10 வருடங்களின் பின் எந்த மாப்பிளைக்கு அதிகம் சீதனம் என்ற prediction மூலம் A/Lல Maths அல்லது Bio தெரிவு செய்வதும், இவை எல்லாமே இந்த சமூக அங்கீகார தேடலின் தொடர்ச்சி.

இப்படி சமூக அங்கீகாரத்துக்காக மட்டுமே திருமணம் செய்யும் நாம் சீதனம் வாங்குவதும் சமூக அங்கீகாரத்துக்காக எனும் போது அதில் தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

(Post image uses a photo from jennifer könig, licensed under a Creative Commons Attribution license.)

பிரிவுகள்
பொது

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

இந்திய நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…!

இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
Photo by sanjeev kar, available under a Creative Commons Attribution-NoDerivs 2.0 Generic license

பிரிவுகள்
பொது

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு

கந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் இந்த பதிவு…

நாம படிக்கேக்க லெக்சருக்கு அரை மணித்தியாலம் லேட், இப்ப வேலைக்கு ஒரு மணித்தியாலம் லேட். இந்த நிலமையில காலம 4 மணிக்கு படுத்தா எப்பிடி 9 மணி சந்திப்புக்கு வாறது. அதில காலம ஏழுமணிக்கு டயலொக்காரன் எழுப்பி bug ஒண்ட பிடிச்சிட்டன் fix பண்ணித்தா எண்டு அடம்பிடிச்சு அதை செய்து முடிக்கவே 9 மணி ஆகீட்டுது. எண்டாலும் நம்ம ஊர் கூட்டம் தானே எண்டு ஆறுதலா கமராவையும் மூட்டை கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு ஒரு ஒம்பதரை போல மண்டபத்துக்கு போனா அங்க எல்லாம் தொடங்கி நடந்து கொண்டிருக்கு. நானென்ன பங்சுவாலிட்டி பரமசிவமா, நமக்கு இதெல்லாம் சகஜம் தானே எண்டு உள்ளுக்க போய் படமெடுக்கிற் வேலைய தொடங்கினன்.

நானும் ஏதோ பதிவர் சந்திப்பெண்டா புல்லட் குடுக்கிறதா சொன்ன வடைய சாப்பிட்டு கலந்துகட்டி உரையாடி வாறதெண்டு பாத்தா, அறிவிப்பாளர் எல்லாம் வச்சு பொதுக்கூட்டம் மாதிரி நடந்து கொண்டிருந்திச்சு. நமக்கு அது முக்கியமில்லத விசயம் என்றதால நான் படமெடுக்கிற வேலைய மட்டும் செய்தனான். அங்க இருந்தாக்களுக்குள்ள எனக்கு தெரிஞ்சது ஒரு பத்து பதினஞ்சு பேர்தான், மற்றப்படி எல்லாமெ பது முகங்கள், பலதும் பது பெயர்கள். கௌபாய் மதுவும் ஊரோடி பகீயும் ஒரு லப்டோப்பை வச்சு சுத்தி சுத்தி படம் காட்டிக்கொண்டிருந்தாங்கள், அது சந்திப்ப உலகத்துக்கே நேரடியா காட்டவாம். நல்ல முயற்சி, என்ன கௌபாயின்ட மொபைல் பில் வந்தாப்பிறகு தான் அவரிண்ட நிலமை தெரியும்.

பிறகு திரட்டிகளை பற்றி மருதமூரான் என்ற பதிவர் கதச்சவர். அவரும் ஒரு திரட்டி வச்சிருக்கிறார், அதப்பற்றி கதைக்கப்போய் எல்லாரும் அந்தாள போட்டு வாங்கீட்டாங்கள். பதிவர் சேரன்கிரிஷ் தொழில்நுட்ப விசயங்கள கதைச்சார் பலருக்கும் அது உபயோகமா இருந்தது. நானும் ஒரு திரட்டி வச்சிரு(க்கிறன்)ந்தனான் எண்டு ஆருக்காவது சொல்லோணுமெண்டு நினச்சனான், ஏன் நமக்கு தேவையில்லாத கதை எண்டு விட்டுட்டன்.

பிறகு எப்படி டைப் அடிச்சு தமிழ் வந்தா நல்லம் எண்டு கதச்சவ. எனக்கு நல்ல தமிழ் வாறதே கஷ்டம், இதில அத டைப்பினா என்ன அடிச்சா என்ன. (நான் பாவிக்கிறது தமிழ் 99, பரிந்துரைக்கிறது தமிழ் 99, ஆனா நாம சொல்றத யார் கேக்கிறாங்கள்…).

புல்லட் ஏற்பாட்டில வடை, பற்றீஸ், கேக் எல்லாம் பால்குடி (எ) தனஞ்சி குடுத்தவர், ஆனாலும் கையில் கமரா இருந்ததால கிட்ட வந்தது கைக்கு வராமா போயிட்டுது. அதவிட குடிக்கிறதுக்கு குடுத்தது டீயா கோப்பியா எண்டு பலருக்கும் டவுட் இருந்தது. நாலு கப் குடிச்சு டெஸ்ட் பண்ணி பாத்தனான், கடைசி வரைக்கும் அதுமட்டும் பிடிபடேல்ல.

பிறகு வந்தியத்தேவன் எண்ட ஒரு மூத்தவர் (பதிவுலகில) நன்றியுரைய பின்னூட்டம் எண்ட பேரில சொன்னவர். அது முடிய கூட்டம் கலஞ்சது. பிறகு மிஞ்சின பட்டீஸ சாப்பிட்டுட்டு, ஊரோடி பகியோடையும் வேற சிலரோடையும் கதச்சிட்டு வெளிக்கிட்டு வீட்ட வரேக்க ஒரு மணி தாண்டீட்டுது. வந்து சேர திரும்ப டயலோக்காரன் இன்னொரு bug பிடிச்சிட்டன் எண்டு நிண்டான்… பேந்தென்ன வழமைதான்….

சில குறிப்புக்கள்:

  1. இணையத்தில் நேரலை ஒளிபரப்பு நல்ல முயற்சி, இனிவரும் சந்தர்ப்பங்களில் இன்னமும் சிறப்பாக செய்யலாம்.
  2. சந்திப்பு வழமையான மரபுசார் கூட்டங்கள் போல் நடத்தப்பட்டதாக எண்ணுகிறேன். இனிவரும் காலங்களில் சற்றே இலகுவான சூழலுடன் நடத்தப்படலாம்.
  3. பதிவர்களுக்கிடையில் சந்திப்பில் அதிக ஊடாடல் நிகழ சந்தர்ப்பம் இருக்காததால் இது ஒரு பதிவர் சந்திப்பாகவன்றி கூட்டமாகவே இருந்தது.
  4. கலந்துரையாடல் விவாதப்போருட்களில் செக்குமாடு மாதிரி அதிகம் சுற்றத்தேவையில்லை. தேடலுக்கான முதல்புள்ளியை கொடுப்பதாக இருப்பதே பொதுமானது.
  5. குறித்த நேரத்துக்கு ஆரம்பித்தது நல்ல விடையம். (அப்பதான் நாம நம்மட லேட் மரப மீறாம இருக்கலாம்)

படம் காட்டுதல்:

இந்த பதிவர் சந்திப்பில் நான் செய்த ஒரே உருப்படியான காரியம் ஒரு சில புகைப்படங்களை எடுத்தது தான். மொத்தமாக எடுத்த 110 படங்களில் தேறிய 80 படங்களை என்னுடைய Flickr தளத்தில் இட்டு வைத்திருக்கிறேன். இவற்றை பதிவர்களும் ஏனையவர்களும் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக (Creative Commons Attribution-Noncommercial) தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.

  1. Attribution – https://nimal.info/ அல்லது http://www.flickr.com/photos/nimal/ என்ற முழு முகவரிகள் குறிப்பிடப்படல் வேண்டும், அல்லது நிமல் என்ற பெயர் குறிப்பிட்டு மேலுள்ள முகவரிகளில் ஏதாவது ஒன்றிற்கு தொடுப்பு கோடுக்கப்பட வேண்டும்.
  2. Noncommercial – இந்த படங்களை நீங்கள் எந்த வணிக நோக்கிலும் பயன்படுத்தலாகாது.
படங்களை இங்கு பெறலாம்.
பிரிவுகள்
பொது

கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை

இந்த இலவச சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

உங்கள் குறைகளை தெரியப்படுத்த:

பங்குபெறுவோருக்கு வடையும் வாழைப்பழமும் வழங்கப்படும், அல்லது போண்டா அல்லது அல்(ல)வா கொடுக்கப்படும் என்ற இனிப்பான தகவலை ஏற்பாட்டுக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.

பிரிவுகள்
பொது

தகவல்: நீங்களும் உதவலாம்…

அன்பு நண்பர்களே,

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள், தங்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் கற்றல் உபகரணங்கள், கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் (Pass Papers Books), மீட்டல் குறிப்புக்கள்(Revision Tutes), என்பன உதவியாக தரும்படி கேட்டுள்ளனர். எனவே உங்களால் முடிந்த உதவிகளை பொருளாகவோ இல்லை பணமாகவோ வரும் 13/07/2009 இற்கு முன்பாக தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.

மேலதிக விபரத்திற்கு அழையுங்கள்
Leo Club of Colombo Circle
Leo Mathu – 0772256463
Leo Miru – 0776672043

leocolombocircle@gmail.com

இப்படிக்கு உண்மையுள்ள,
R.Mirunan
கழக செயலாளர் (09 /10)
Leo Club of Colombo Circle
பிரிவுகள்
பொது

நேர்முகத் தேர்வு – சில குறிப்புக்கள்

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.)

தயார்ப்படுத்தல்:

  • உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது. 
  • கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம்.

ஆராய்ச்சி:

  • நீங்கள் செல்ல இருக்கும் நிறுவனத்தையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றியும் அடிப்படையாக தெரிந்து வைத்திருக்கவும். இதற்கு அவர்களின் இணையத்தளம் மற்றும் முக்கியமாக அங்கு ஏற்கனவே பணியில் யாராவது seniors/friends இருந்தால் அவர்களிடம் உரையாடுவது பயன்தரும். 
  • முக்கியமாக அவர்கள் என்ன பணிக்கு தெரிவுசெய்கிறார்கள், தெரிவு செய்யப்படுபவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பவற்றை தெரிந்து வைத்திருப்பது எம்மை சரியான முறையில் வெளிப்படுத்த உதவும். அத்தோடு இவ்வாறு நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருத்தல் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையுடன் அணுகவும் உதவும்.

புறம்:

  • புறத்தோற்றம் ஒரு முக்கிய காரணி என்பதை நினைவில் நிறுத்தவும். ‘என் திறமைக்கு வேலை தந்தால் சரி’ என்ற பந்தாவை விடுத்து, பொருத்தமான ஆடை அணியவும். 
  • அந்த நிறுவனத்தில் வேலைக்கு சாதாரண ஆடை தான்(casual) அணிவதென்றாலும் நேர்முகத்தேர்வுக்கு பொருத்தமான professionally acceptable ஆடை அணிவது நலம்.

அகம்:

  • மேற்கூறியவற்றை சரியாக செய்திருந்தால், எமக்கு தானாக ஒரு தன்னம்பிக்கை வரும். ஆனாலும் அதையும் தாண்டி மனப்பயம் இருந்தால் அதை அதிகமாக வெளிக்காட்டுவதை தவிர்க்கலாம். ஆனால் அதற்காக over confident என்று act கொடுத்து மாட்டிக்கொள்ள கூடாது.

சுய ‘வியாபாரம்’:

  • நேர்முகத்தேர்வை ஒரு வியாபாரமாக பார்க்கவும், உங்களின் திறமைகளையும் அனுபவங்களையும் சரிவர வெளிப்படுத்தவும். உங்கள் அனுபவங்களை கூறும்படி கேட்டால், அந்த நிறுவனத்தில் செயற்பாடுகளுக்கு அவை உதவும் என தோன்றும் வகையில் அவற்றை தெரிவிக்கவும். 
  • அத்தோடு அவர்கள் “any question you want to ask us?” என்று கேட்டால், “ஏன் நீங்கள் product A ஐ விடுத்து product B யில் அதிகம் கவனம் செலுத்துகிறீர்கள்?” போன்றதான தொடர்புடைய கேள்விகளை கேட்பது உங்களின் தயார்படுதலையும் ஈடுபாட்டையும் வெளிக்காட்டும். (அதற்காக இல்லாத product பெயர் சொல்லி கேட்பது உசிதம் அல்ல)

பின் தொடர்பு:

  • நேர்முகத் தேர்வு முடிந்தது இனி அவர்களின் பதில் வரும் வரை காத்திருப்போம் என்றிருக்காமல், அவர்களுக்கு உங்களை நேர்முகத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அல்லது கடிதம் அனுப்பலாம். இதில் நேர்முகத் தேர்வில் நடைபெற்ற உரையாடலின் சுருக்கத்தையும் குறிப்பிடுவது உங்களை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்.

தொடர் முயற்சி:

  • முதல் முயற்சி வெற்றியளித்தால் மகிழச்சிதான், இல்லாவிட்டால் அதை ஒரு அனுபவமாக கருதவும். இது உங்களின் அடுத்த நேர்முகத் தேர்வுகளின் இன்னும் தன்னம்பிக்கையுடன் முகம்கொடுக்க உதவும். தொடர் தயார்ப்படுத்தலும் தொடர் முயற்சியும் நிச்சயம் வெற்றியை பெற்றுத்தரும்.

இவை எனது அனுபவங்களிலும், வேறு பல சந்தர்ப்பங்களில் கேட்டவை, படித்தவை மட்டுமே. எனக்கு இதுவரை சரியான ஒரு நேர்முகத் தேர்வு அனுபவம் இல்லை… 🙂

வாழ்த்துகள்…!

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Tags: job, interview, tips